எரிபொருள் தட்டுப்பாடு இல்லை; விலைக் குறைப்பும் போதுமானதல்ல என விமர்சனம்
எரிபொருட்கள் தற்போது எந்தத் தட்டுப்பாடும் இன்றி கிடைத்து வருவதால், எரிபொருள் விநியோகத்துக்காக அறிமுகப்படுத்தப்பட்ட QR (கியூஆர்) முறையை உடனடியாக அரசாங்கம் நீக்க வேண்டும் என புதிய ஜனநாயக முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர், அரசாங்கம் அறிவித்துள்ள எரிபொருள் விலைக் குறைப்பு போதுமானதாக இல்லை என்றும் தெரிவித்தார்.
உலக சந்தையில் எரிபொருள் விலை குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ள நிலையில், அதற்கு ஏற்ப உள்நாட்டிலும் விலையை குறைக்க வேண்டியது நியாயமான நடவடிக்கையாகும் என்று அவர் கூறினார். உலக சந்தையில் விலை உயர்ந்தபோது, அதற்கேற்ப இலங்கையிலும் எரிபொருள் விலை உயர்த்தப்பட்டது. அதேபோல் தற்போது உலக சந்தையில் விலை குறைந்துள்ளதால், அதற்கேற்ற அளவில் விலையைக் குறைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், எரிபொருளை கொள்முதல் செய்யும் விலைக்கும், விற்பனை செய்யும் விலைக்கும் இடையில் நட்டமோ அல்லது முறையற்ற லாபமோ ஏற்படாத வகையில் விலை நிர்ணயம் செய்யுமாறு சர்வதேச நாணய நிதியம் (IMF) அரசாங்கத்திற்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அரசாங்கம் தற்போது அந்த வழிகாட்டுதலின் அடிப்படையில் செயல்படுகிறதா என்பது குறித்து தெளிவான தகவல்கள் வெளியிடப்படவில்லை என்றும், உலக சந்தை விலைக்கு ஏற்ப இலங்கையில் எரிபொருள் விலை போதுமான அளவில் குறைக்கப்படவில்லை என்றே தாம் கருதுவதாகவும் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
