ஆஜராகாத நிலையில், அவர் மீதான அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து போலீசார் ஆலோசித்து வருகிறார்கள்.
த.வெ.க. ஆட்சியை கவிழ்க்க ஊத்தங்கரை எம்.எல்.ஏ.விடம் பேரம் பேசியதாக யூடியூபர் திருநாவுக்கரசு என்பவர் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் விசாரணைக்கு ஆஜராகுமாறு முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு திருவல்லிக்கேணி போலீசார் சம்மன் அனுப்பினர். ஆனால் செந்தில் பாலாஜி ஆஜராகாத நிலையில், அவர் மீதான அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து போலீசார் ஆலோசித்து வருகிறார்கள்.

முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க. ஆட்சியை கவிழ்ப்பதற்கு, சதித்திட்டம் தீட்டி த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள் சிலரிடம் குதிரை பேரம் நடத்துவதாக அமைச்சர் நிர்மல்குமார் அண்மையில் சில தகவல்களை வெளியிட்டிருந்தார்.இது ஒருபுறம் எனில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ. டாக்டர் இளையராஜா, தன்னிடம் ரூ.35 கோடி தருவதாக பேரம் பேசினார்கள், என்று சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் சென்னை திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
அவர்கள் நடத்திய விசாரணைக்கு பின்னர், த.வெ.க. எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் ரூ.35 கோடி பேரம் பேசியதாக, ஐ.பி.டி.எஸ். என்ற தேர்தல் கருத்துக்கணிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் திருநாவுக்கரசு உள்ளிட்ட 9 பேரை போலீசார் கைது செய்தனர். கைதானவர்கள், தி.மு.க. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும், அவரது சகோதரர் அசோக்குமாரும் கூறிய அறிவுரையின்பேரில்தான் த.வெ.க. எம்.எல்.ஏ. விடம் ரூ.35 கோடி பேரத்தில் ஈடுபட்டதாக போலீசாரிடம் வாக்குமூலம் தந்ததாக கூறப்படுகிறது

.
அதன் அடிப்படையில், செந்தில்பாலாஜியையும், அவரது சகோதரர் அசோக்குமாரையும் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு திருவல்லிக்கேணி போலீசார் சம்மன் அனுப்பினார்கள். அந்த சம்மனில், ஜூலை 6-ந்தேதி ஆஜராகவேண்டும் என்று கூறப்பட்டது. நேற்று அவர்கள் இருவரும் திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் ஆஜராவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதுதொடர்பாக பத்திரிக்கையாளர்களும், யூடியூபர்களும் திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் நேற்று காலையில் குவிந்து இருந்தனர். ஆனால், செந்தில்பாலாஜியும், அவரது சகோதரர் அசோக்குமாரும் போலீஸ் விசாரணைக்கு ஆஜராகவில்லை. எனவே அவர்கள் மீது அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன? என்பது குறித்து போலீசார் நேற்று அதிரடி ஆலோசனை நடத்தி வருகிறார்கள். இது ஒருபுறம் எனில்,

ஏற்கனவே செந்தில்பாலாஜியும், அவரது சகோதரர் அசோக்குமாரும் வெளிநாடு தப்பி செல்லாமல் தடுப்பதற்காக, அனைத்து விமான நிலையங்களுக்கும் ‘லுக்-அவுட்’ நோட்டீஸ் கொடுத்து, போலீசார் உஷார்படுத்தியுள்ளனர். அவர்களை கைது செய்ய போலீசார் தீவிரமாக முயற்சி செய்வதாக கூறப்படுகிறது.அதேநேரம் இன்னொரு முறை அவர்களுக்கு சம்மன் அனுப்பலாமா? என்பது குறித்தும் போலீசார் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
