August 4, 2026
சமையல்

சுண்டைக்காய் துவையல் செய்முறை

நாம் எடுத்துக் கொள்ளும் உணவு அறுசுவைகள் நிறைந்த உணவாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் நம்முடைய உடலில் எந்தவித நோய்களும் ஏற்படாது என்று நம்முடைய முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள், அப்படி இருக்கக்கூடிய அந்த அறுசுவைகளில் மிகவும் முக்கியமான ஒன்றாக இருப்பது தான் கசப்பு சுவை. கசப்பு சுவை என்றதும் நம் நினைவிற்கு வருவது பாவக்காய் தான். பாவக்காய் போலவே கசப்பு சுவை மிகுந்ததாக திகழ்வதுதான் சுண்டைக்காய். எப்படி தான் இதை நம்முடைய உணவில் சேர்த்துக்கொண்டாலும் சிறுவர்களும் சரி, பெரியவர்களும் சரி சுண்டைக்காயை தனியாக எடுத்து வைத்துவிட்டு தான் சாப்பிடுவார்கள். சுண்டைக்காயை வைத்து அனைவரும் சாப்பிடும் வகையில் துவையல் எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.

தேவையான பொருட்கள் :

சுண்டைக்காய் – 4 கைப்பிடி

கடலைப்பருப்பு – ஒரு கைப்பிடி

உளுந்து – ஒரு கைப்பிடி

எண்ணெய் – 3 ஸ்பூன்

சின்ன வெங்காயம் – ஒரு கைப்பிடி

காய்ந்த மிளகாய் – 5

பூண்டு – 6 பல்

சீரகம் – 1/2 ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

புளி – சிறிய நெல்லிக்காய் அளவு

தேங்காய் – 1/2 மூடி

கருவேப்பிலை – ஒரு கைப்பிடி

செய்முறை :

முதலில் சுண்டைக்காய் ஒரு துணியில் போட்டு இடி கல்லை வைத்து ஒன்றிரண்டாக இடித்துக் கொள்ளுங்கள். அப்படி இல்லை என்றால் நறுக்கி கூட நாம் செய்யலாம். இப்படி இடித்த இந்த சுண்டைக்காயை ஒரு பாத்திரத்தில் சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக கழுவி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்ததாக அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் கடலைப்பருப்பையும், உளுந்தையும் சேர்த்து நன்றாக சிவக்க வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது அதே கடாயை திரும்பவும் அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் சின்ன வெங்காயம், பூண்டு, காய்ந்த மிளகாய், சீரகம் போன்றவற்றை போட்டு எண்ணெயில் நன்றாக வதக்க வேண்டும்.

வெங்காயமும், பூண்டும் நன்றாக வதங்கிய பிறகு இடித்து வைத்திருக்கும் சுண்டைக்காய் அதில் சேர்த்து நன்றாக ஒரு முறை பிரட்டி விட்டு மூடி போட்டு ஒரு நிமிடம் வைக்க வேண்டும். பிறகு மூடியை திறந்து தேவையான அளவு உப்பு, நெல்லிக்காய் அளவு புளி மற்றும் நறுக்கிய அல்லது துருவியை தேங்காயை அதில் சேர்த்து மறுபடியும் நன்றாக வதக்கி மூடி போட்டு வைத்து விடுங்கள். சுண்டைக்காய் எண்ணெயிலேயே நன்றாக வேக வேண்டும் என்பதால்தான் இப்படி செய்கிறோம்.

சுண்டைக்காய் நன்றாக வெந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி நன்றாக ஆற வைத்துக் கொள்ளுங்கள். இவை அனைத்தும் ஆறிய பிறகு நாம் ஏற்கனவே வறுத்து வைத்திருக்கும் கடலைப்பருப்பு உளுந்தை மிக்ஸி ஜாரில் சேர்த்து, வதக்கி வைத்திருக்கும் இந்த சுண்டைக்காயையும் சேர்த்து, இதனுடன் ஒரு கைப்பிடி அளவு கருவேப்பிலையும் சேர்த்து முதலில் தண்ணீர் ஊற்றாமல் அரைத்து கொள்ளுங்கள்.

பிறகு சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி துவையல் பதத்திற்கு அரைத்து கொள்ள வேண்டும். துவையல் நைசாக இருக்கக் கூடாது. கொரகொரப்பாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் சுவையாக இருக்கும். அவ்வளவுதான் மிகவும் சுவையான சுண்டைக்காய் துவையல் தயாராகிவிட்டது. வடித்த சாதத்தில் நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து இந்த துவையலை போட்டு பிணைந்து சாப்பிடும் பொழுது இதன் சுவையில் மெய் மறந்து போவதோடு மட்டுமல்லாமல் இந்த துவையல் வேண்டும் என்று கேட்கும் அளவிற்கு சுவை அபாரமாக இருக்கும்.

சுண்டைக்காயை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புபவர்கள் இந்த முறையில் துவையல் செய்து கொடுக்க வீட்டில் இருக்கும் அனைவரும் உனக்கு எனக்கு என்று போட்டி போட்டு சாப்பிட்டு காலி செய்து விடுவார்கள்.

Related posts

பச்சை மொச்சை’ ஸ்பெஷல்: கூட்டு முதல் தோசை வரை அசத்தலான ரெசிபிகள்!

finhelvantaan

எளிய செய்முறை கிராமத்து ஸ்டைல் சிக்கன் சிந்தாமணி எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க

finhelvantaan

கேழ்வரகு பன் தோசை ரெசிபி வேர்க்கடலை சட்னியும்! காலை உணவு

finhelvantaan

Leave a Comment