வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவதை போல் இந்த அரசாங்கம் தமிழர்களுக்கு எதிரான சில நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதாக தமிழ் அரசியல் அவதானிகள் கருத்து தெரிவித்துள்ளனர் தமிழர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்
அமைச்சரவை குறித்த கிவுல் ஓயா அபிவிருத்தி வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற தீர்மானத்துக்கு வந்தது.
கிவுல் ஓயா திட்டத்தின் கீழ் எந்தவொரு இனவாத நோக்கமும் அரசாங்கத்துக்கு இல்லை எனவும் முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்ட மக்களின் நீர் பிரச்சினையின் அத்தியாவசியத் தேவையை உணர்ந்து, 6 மடங்கு செலவு அதிகரிப்பில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
எனவே இதனை அரசியல் மயப்படுத்த வேண்டாம் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் செவ்வாய்கிழமை 10 இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்ட மக்களின் நீர் பிரச்சினைக்கு தீர்வினை வழங்குவதற்காகவும் குறிப்பாக விவசாய நடவடிக்கைகளுக்கு நீர்ப்பாசனத்தை வழங்குவதற்கானதுமான அத்தியாவசிய வேலைத்திட்டமாகவே இந்த கிவுல் ஓயா திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
ஆனால் இது எமது அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட வேலைத்திட்டம் அல்ல.2011ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் அப்போதைய அமைச்சரவை குறித்த கிவுல் ஓயா அபிவிருத்தி வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற தீர்மானத்துக்கு வந்தது.
இதற்காக அக்காலப்பகுதியில் 4170 மில்லியன் ரூபா செலவு மதிப்பிடப்பட்டிருந்தது. இது மகாவலி எல் வலயத்துக்குள்ளேயே காணப்படுகிறது.எவ்வாறிருப்பினும் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் அந்த திட்டம் முறையாக முன்னெடுக்கப்படவில்லை.

கொவிட் தொற்று மற்றும் அதன் பின்னரான பொருளாதார நெருக்கடிகள் உள்ளிட்ட காரணிகளால் இந்த திட்டம் இடைநடுவில் கைவிடப்பட்டது.சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னர் அத்தியாவசியமானது என இனங்காணப்பட்ட வேலைத்திட்டத்தை, தற்போது நடைமுறைப்படுத்துவதற்கு நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

அதற்கமைய தேசிய நிதியத்தின் ஊடாக 2026 – 2031ஆம் ஆண்டு வரை இந்த திட்டத்தை முன்னெடுத்து அதனை நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளோம்.எவ்வாறிருப்பினும் அன்று 4170 மில்லியன் ரூபா செலவில் இதனை நிறைவு செய்ய முடியும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், தற்போது அது 23 456 மில்லியன் ரூபா வரை அதிகரித்துள்ளது.
