இலங்கையில் தமிழ் இனப்படுகொலை நடக்கவே இல்லை இலங்கையில் தமிழ் இனப்படுகொலை நடக்கவே இல்லை. கனடா அல்ல உலகில் எந்த நாடு இந்த குற்றச்சாட்டை முன்வைத்தாலும் அதற்கு நாம் கடும் எதிர்ப்பை வெளியிடுவோம்” என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.
“இலங்கையில் இனப்படுகொலை நடந்தது எனக் கூறப்படுவதை ஏற்கவே முடியாது. போரின்போதுகூட சிவில் மக்களை பாதுகாத்தப்படியே போர் முன்னெடுக்கப்பட்டது. பயணக் கைதிகளாக பிடித்து வைத்திருந்த மக்களைக்கூட படையினரே மீட்டனர்.
இலங்கையில் இனப்படுகொலை நடந்துள்ளது என எந்தவொரு நாடும் ஆதாரத்துடன் குற்றச்சாட்டு முன்வைக்கப்படவில்லை.
போர் காரணமாக கைது செய்யப்பட்ட புலிகள் மற்றும் சந்தேக நபர்களை சிறைக்குள் கொல்லப்படவும் இல்லை. எனவே, கனடா அல்ல உலகில் எந்தவொரு நாடாக இருந்தாலும் இனப்படுகொலை குற்றச்சாட்டை நாம் ஏற்கமாட்டோம். இதுவே எமது உறுதியான நிலைப்பாடாகும். இராஜதந்திர ரீதியில் தலையிட வேண்டிய விதத்தில் நாம் தலையிட்டுள்ளோம்.” என தெரிவித்துள்ளார்.
