அண்டை நாடான வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக கடந்த ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மாணவர் அமைப்பினர், பொதுமக்கள் இணைந்து நடத்திய புரட்சி மிகப்பெரிய வன்முறையாக வெடித்தது. இதன் காரணமாக பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இதையடுத்து வங்கதேசத்தில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, ராணுவத்தின்
கண்காணிப்பில் அங்கு இடைக்கால அரசு அமைந்துள்ளது. இந்த நிலையில், நேற்று இரவு (பிப்.5) அவாமி லீக் கட்சியின் மாணவர் அமைப்பு ஒருங்கிணைத்த ஆன்லைன் நிகழ்ச்சியில் முகநூல் மூலம் ஷேக் ஹசீனா பேசவிருந்தார். அதேநேரத்தில், போராட்டக்காரர்கள் அவருடைய தந்தையின் வீட்டைச் சேதப்படுத்தினர். வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மானின் வீட்டை போராட்டக்காரர்கள் தீயிட்டு கொளுத்தி, புல்டோசர்
கொண்டு இடித்தனர். அவரது வீடு மட்டுமல்லாமல், ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியின் தலைவர்கள் பலரது வீடுகளும் இடிக்கப்பட்டன. அந்த வீடு ஓர் அருங்காட்சியகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.இதுகுறித்து முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, “நாட்டின் சுதந்திரத்தை சில புல்டோசர்களை கொண்டு முடிவுக்குக் கொண்டு வர அவர்களால் முடியாது. கட்டடங்களை இடிக்கலாம், ஆனால் வரலாற்றை சேதப்படுத்த முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.
வங்கதேசத்தின் நண்பர் என அழைக்கப்படும் ஷேக் முஜிபுர் ரஹ்மானின் சிலையும், கடந்த ஆண்டு கலவரத்தின்போது இடிக்கப்பட்டது. மேலும், அவர் உருவம் பொறித்த கரன்சிகளும் ரத்து செய்யப்பட்டு புதிய கரன்சிகளை இடைக்கால அரசு உருவாக்கி வருவது குறிப்பிடத்தக்கது
