திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இன்று போராட்டம் நடத்தப்படும் என இந்து முன்னணி அறிவித்துள்ள நிலையில் மதுரை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் போலீசார்
குவிக்கப்பட்டுள்ளனர்.முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடாக மதுரை திருப்பரங்குன்றம் உள்ளது. அங்கு தமிழகம் முழுவதிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆண்டுதோறும் தரிசனம் செய்கின்றனர். இந்த நிலையில் மலையில் உள்ள சிக்கந்தர் பாதுஷா தர்காவில் ஆடு கோழிகளை பலியிட வேண்டும் என இஸ்லாமிய மக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதற்கு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், அங்கு ஆடு கோழிகளை பலியிட தடை
விதிக்கப்பட்டது. இரு தரப்பினரிடையே கடுமையான மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த நிலையில் திருப்பரங்குன்றம் சென்ற வக்கு வாரிய தலைவரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவரும் ராமநாதபுரம் எம்பியுமான நவாஸ் கனி குறிப்பிட்ட சில அமைப்புகளுடன் அங்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது அவருடன் வந்தவர்கள் பிரியாணி சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இந்த புகைப்படத்தை நவாஸ் கனியும் தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டிருந்தார். இந்த நிலையில்
திருப்பரங்குன்றம் கோவிலில் மலையில் அமர்ந்து நவாஸ் கனி அசைவ உணவு சாப்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவர் பதவி விலக வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர்.இந்த நிலையில் திருப்பரங்குன்றம் மலையைக் காக்க இன்று போராட்டம் நடைபெறும் என இந்து முன்னணி அறிவித்திருந்தது. இதில் பல இந்து அமைப்புகளும் கலந்து கொள்வார்கள் என அறிவித்தது. இந்த நிலையில் இந்து முன்னணி போராட்டத்தை முன்னிட்டு சுவரொட்டி அவர்கள் நோட்டீஸ்
வழங்கியவர்களை காவல்துறையினர் கைது செய்து வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க மதுரையில் நேற்றும் இன்றும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும் போராட்டங்கள் நடத்தவும் பொது இடங்களில் மக்கள் கூடவும் தடை விதிக்கப்படுவதாக மதுரை மாநகர் போலீசார் கூறியுள்ளனர். இந்த நிலையில் தடையை மீறி போராட்டம் திட்டமிட்டபடி நடக்கும் என இந்து முன்னணி அறிவித்துள்ளது. மேலும் பாஜக உள்ளிட்ட பிற கட்சிகளும் இந்து அமைப்பினரும் திருப்பரங்குன்றம் மலைக்குச் செல்வோம் என அறிவித்திருக்கிறார்கள்.
அங்கு பதட்டம் நீடிப்பதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள். மேலும் கலவர தடுப்பு வாகனங்களும் தயார் நிலையில் இருக்கின்றன. திருப்பரங்குன்றம் மலைக்கு தடையை மீறி வருபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் கூறியுள்ளனர். இந்த நிலையில் நேற்று அண்ணா பிறந்த நாளை ஒட்டி திமுகவினர் அமைச்சர் மூர்த்தி தலைமையில் ஊர்வலமாக சென்று அண்ணா சிலைக்கு
மாலை அணிவித்தனர். மதுரையில் நேற்றும் இன்றும் 144 தடை உத்தரவு திமுக அரசு சார்பில் பிறப்பிக்கப்பட்டு இருக்கும் நிலையில் அமைச்சர் மூர்த்தி ஊர்வலத்திற்கு மட்டும் அனுமதி வழங்கியது எப்படி என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி மலையின் புனிதத்தை காக்க இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் ஜனநாயக ரீதியாக போராட்டத்தை அறிவித்த நிலையில் பொதுமக்கள் எழுச்சியை தடுக்க வேண்டும் என்ற ஒரே நோக்கோடு திமுக அரசு 144 தடை விதித்த நிலையில் தமிழகம் முழுவதும் திமுகவினர் ஊர்வலத்தை அனுமதித்திருப்பது ஜனநாயகத்தை கேலிக்குரியதாக்கியிருக்கிறது” என எக்ஸ் தளத்தில் விமர்சித்துள்ளார்.
