தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதிலும் முறைகேடு இடம்பெறுவதை தவிர்த்துக் கொள்ள முடியாத அளவுக்கு இந்த அரசாங்கத்தின் செயற்திறன் காணப்படுகிறது.
இந்த அரசாங்கம் ‘எப் போர்ட்’ என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்ட கருத்து இன்று உண்மையாகியுள்ளது.
இவர்கள் வாய்ச்சொல் வீரர்களே தவிர செயல் வீரர்களல்ல என்று புதிய ஜனநாயக முன்னணியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
கொழும்பில் திங்கட்கிழமை (9) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்கள் தொடர்பில் ஆரம்பத்தில் இருந்து பாராளுமன்றத்திலும், வெளியிலும் குறிப்பிட்டோம். இதற்கு அரசாங்கம் பதிலளிக்காமல் தான்தோன்றித்தனமாக செயற்பட்டது.
என்னை நெருக்குள்ளாக்கும் வகையில் இவ்விடயம் குறித்து குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு முறைப்பாடளிக்கப்பட்டது.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு கடந்த வாரம் முன்னிலையாகி வாக்குமூலமளித்தேன். எதிர்க்கட்சி என்ற அடிப்படையில் நாங்கள் குறிப்பிடும் கருத்துக்களை கொண்டு எம்மை நெருக்கடிக்குள்ளாக்கவே அரசாங்கம் முயற்சிக்கிறது.
இதற்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்தை அரசாங்கம் பயன்படுத்திக் கொள்கிறது. அரசாங்கத்தின் இந்த செயற்பாடு வெட்கக்கேடானது.
