ஒடிஷாவில், கல் குவாரிக்கு சென்ற லாரியை வழிமறித்து, நக்சல்கள் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்து சென்ற 4,000 கிலோ வெடி பொருட்களை பாதுகாப்புப் படையினர் பத்திரமாக மீட்டனர்.ஒடிஷாவில் முதல்வர் மோகன் சரண் மஜி தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
இங்கு, கடந்த மாதம் 27ம் தேதி, சுந்தர்கர் பகுதியில் உள்ள கல் குவாரிக்கு தேவையான வெடிபொருட்களை ஏற்றிச்சென்ற லாரியை, ஆயுதம் ஏந்திய, 40க்கும் மேற்பட்ட நக்சல் கும்பல் வழிமறித்தது. அப்போது டிரைவரை மிரட்டி, லாரியை அக்கும்பல் கடத்திச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
டிரைவர் அளித்த தகவலின்படி லாரிக்குள் 200 பெட்டிகளில், 4,000 கிலோ வெடிபொருட்கள் இருந்தது தெரியவந்தது.இதற்கிடையே, கொள்ளையடித்துச் சென்ற வெடி பொருட்களை, ஒடிஷா எல்லையையொட்டி உள்ள ஜார்க்கண்டின் சாராண்டா வனப்பகுதியில் நக்சல்கள் பதுக்கி வைத்திருக்கலாம் என, பாதுகாப்புப் படை அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது.
இதையடுத்து அப்பகுதிகளில் சிறப்புப் படையினர், சி.ஆர்.பி.எப்., எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை, ஜார்க்கண்டின் ஜாக்குவர் படை உள்ளிட்டோர் இணைந்து தேடுதல் வேட்டையை நடத்தினர்.
அப்போது சாராண்டா வனப்பகுதி அருகே உள்ள திருல்போஷ் நிலத்துக்கு அடியிலும், பாறைகளுக்கு அடியிலும் புதைத்து வைக்கப்பட்ட வெடி பொருட்களை அவர்கள் கண்டறிந்தனர்.
மீட்கும் பணியில் ஈடுபட்டபோது, நக்சல்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்கு, பாதுகாப்பு படையினர் நடத்திய பதில் தாக்குதலில், அவர்கள் தப்பியோடினர்.
இதையடுத்து, லாரியில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட வெடி பொருட்கள் அனைத்தையும் பாதுகாப்பு படையினர் மீட்டனர்.
இதில், பெரும்பாலும் கல் குவாரிகளில் பயன்படுத்தப்படும் ஜெலட்டின் குச்சிகள் இருந்தன.
