ஆப்பிள் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் மவுனம் காத்து வருகிறார்

1363154.jpg

ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்களை அமெரிக்காவில் தயாரிக்கவில்லை என்றால், இறக்குமதி செய்யப்படும் ஐபோன்களுக்கு 25% வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மிரட்டல் விடுத்தார். இருப்பினும் இந்த விவகாரத்தில் ஆப்பிள் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் மவுனம் காத்து வருகிறார்.

டிம் குக் மவுனத்தின் பின்னணி என்ன என்பது குறித்து விரிவாக பார்ப்போம். அண்மையில் மேற்கு ஆசிய நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அந்த பயணத்தில் அவருடன் அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களின் பிரதிநிதிகள் இணைவது தொடர்பான அழைப்பு வெள்ளை மாளிகை தரப்பில் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அதற்கு டிம் குக் மறுத்துவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது. அது அதிபர் ட்ரம்ப்புக்கு எரிச்சல் தந்துள்ளது.இந்தச் சூழலில் ஆசிய சுற்றுப்பயணத்தின் போது ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கத்தாரில் பேசிய ட்ரம்ப், டிம் குக்கை கடுமையாக விமர்சித்தார். ட்ரம்ப் உடன் இந்த பயணத்தில் ஓபன் ஏஐ சிஇஓ சாம் ஆல்ட்மேன், என்விடியா சிஇஓ ஜென்சன் ஹுவாங் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அப்போதுதான் குக் மீதான அதிருப்தியை ட்ரம்ப் வெளிப்படுத்தினார்.டிம் குக் இங்கு இல்லை. அமெரிக்காவில் உங்களது முதலீடு வரவேற்கத்தக்கது. நீங்கள் இந்தியாவில் உற்பத்தி கட்டமைப்புகளை அமைப்பதில் எங்களுக்கு விருப்பம் இல்லை. ஆப்பிள் நிறுவனம் அமெரிக்காவில் ஐபோன்களை அசெம்பிள் செய்யத் தொடங்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்” என ட்ரம்ப் அப்போது தெரிவித்தார்.

தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை அன்று, தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைதளத்தில் வெளியிட்ட ஒரு பதிவில், “அமெரிக்காவில் விற்கப்படும் ஐபோன்கள் அமெரிக்காவிலேயே தயாரிக்கப்பட வேண்டும் என்று நான் நீண்ட காலமாக ஆப்பிள் நிறுவனத்தின் டிம் குக்கிடம் தெரிவித்து வருகிறேன். அவை இந்தியாவிலோ அல்லது வேறு எங்குமோ தயாரிக்கப்படக் கூடாது. இது நடக்கவில்லை என்றால், குறைந்தபட்சம் 25% கட்டணத்தை ஆப்பிள் நிறுவனம் அமெரிக்காவுக்கு செலுத்த வேண்டும்” என்று ட்ரம்ப் கூறியிருந்தார்.

இந்த புதிய கட்டண விவகாரம் ஆப்பிள் நிறுவனத்துக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு டிம் குக் உடன் சிறந்த நட்பு ரீதியான உறவை முதல் முறையாக அதிபராக இருந்த போது ட்ரம்ப் கொண்டிருந்தார். ஆனால், இப்போது அந்த நிலை அப்படியே தலைகீழாக மாறியுள்ளது. அதிபர் ட்ரம்ப் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்ட காரணத்தால் ஆப்பிள் நிறுவனம் இப்போது வெள்ளை மாளிகையில் பிரதான டார்க்கெட்டில் உள்ள கார்ப்பரேட் நிறுவனமாக மாறியுள்ளது. இது டிம் குக்குக்கு சங்கடத்தை தந்துள்ளது.

ட்ரம்ப் – குக் இடையிலான உறவு முறிவு பலருக்கும் ஆச்சரியத்தை தந்துள்ளது. ‘ட்ரம்ப் உடனான உறவில் டிம் குக் தற்போது பின்னடைவை சந்தித்துள்ளார். மேலும், இது ஆப்பிள் நிறுவனத்துக்கு பாதகமாக அமைந்துள்ளது. ட்ரம்ப் வசமிருந்த கிடைத்து சலுகைகள் இப்போது ஆராயப்படும் வாய்ப்பு உள்ளது’ என ஃபோர் கார்னர்ஸ் பொது விவகாரங்கள் நிறுவனத்தின் நு வெக்ஸ்லர் கூறியுள்ளார்.

கடந்த 2011-ல் ஆப்பிள் நிறுவனத்தின் சிஇஓ பொறுப்பை டிம் குக் ஏற்றது முதல் ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 2.5 ட்ரில்லியன் டாலர்கள் உயர்ந்துள்ளதாக தகவல். ஆண்டுக்கு 100 பில்லியன் டாலர் லாபம் ஈட்டி வருகிறது அந்நிறுவனம். இந்நிலையில், ட்ரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபர் ஆனது ஆப்பிளுக்கு வர்த்தக ரீதியாக உதவும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ட்ரம்ப் – குக் உறவு இப்போது கசந்துள்ளது.

அமெரிக்காவில் அடுத்த நான்கு ஆண்டுகளில் 500 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்யப்படும் என ஆப்பிள் அறிவித்தது. இருப்பினும் அது ட்ரம்ப்புக்கு ஆறுதல் தரவில்லை என தகவல். அதோடு தனது நிலைப்பாட்டில் அவர் உறுதியாக இருக்கிறார் என்றும் தெரிகிறது. இது தொடர்பாக டிம் குக், வெளிப்படையாக எதுவும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வருகிறார்.

இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம்: மொபைல் போன், கணினி உள்ளிட்ட டிஜிட்டல் சாதனங்களை தயாரித்து, விற்பனை செய்து வருகிறது ஆப்பிள் நிறுவனம். அந்த நிறுவனத்தின் சாதனங்களை அதிக அளவில் உற்பத்தி செய்யும் நாடுகளாக சீனா, இந்தியா உள்ளன.

கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியாவில் ஃபாக்ஸ்கான் மற்றும் டாடா மூலம் உற்பத்தியை ஆப்பிள் நிறுவனம் அதிகரித்து வருவது கவனிக்கத்தக்கது. இந்திய அரசு வழங்கும் சலுகை, சீனாவில் நிலவும் கெடுபிடி போன்றவை இதற்கு காரணமாக அமைந்துள்ளது.

இந்நிலையில், ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களை அசெம்பிள் செய்யும் பணியை அமெரிக்காவுக்கு இடம்பெயரச் செய்வது சவாலான காரியம் என தகவல் கிடைத்துள்ளது. ஏனெனில், அமெரிக்காவில் தொழிலாளர்களுக்கான கூலி மிகவும் அதிகம். மேலும், அமெரிக்காவில் சிப் மற்றும் இந்தியாவில் உற்பத்தி செய்யாத காம்பனென்ட்கள் மட்டுமே ஆப்பிள் தயாரிக்கிறது.

இது தொடர்பாக ஆப்பிள் தரப்பு எந்தவித கருத்தையும் தெரிவிக்க முன்வரவில்லை. அதே நேரத்தில் இந்தியாவில் தங்களது தற்போதைய திட்டங்கள் எதையும் அதிபர் ட்ரம்ப்பின் கருத்து தாக்கத்தை ஏற்படுத்தாது என இந்திய அரசிடம் ஆப்பிள் நிறுவனம் உறுதிபட தெரிவித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்தியாவில் உள்ள ஆப்பிள் நிறுவனத்தின் உற்பத்திக் கூடம் மூலம் அமெரிக்கா மற்றும் இந்தியாவில் ஐபோன் டிமாண்ட்களை ஈடு செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதன்படி தற்போது ஸ்ரீபெரும்புதூர் மற்றும் மஹிந்திரா வேர்ல்ட் சிட்டியில் அமைந்துள்ள உற்பத்திக் கூடங்களில் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் கிருஷ்ணகிரி மற்றும் தும்கூரில் உற்பத்தி பணிகள் தொடங்க உள்ளது. அங்கு கட்டுமான பணிகள் முழுமை அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதில் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஆப்பிள் சாதன உற்பத்தி கூடத்தில் இருந்து கடந்த ஆண்டு மட்டும் 20 மில்லியன் (2 கோடி) ஐபோன்கள் உற்பத்தி செய்யப்பட்டன. இதில் ஐபோன் 15 மற்றும் ஐபோன் 16 மாடல்களும் அடங்கும். மேலும், இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் நேரடி விற்பனை மையங்களாக டெல்லி மற்றும் மும்பையில் ஆப்பிள் ஸ்டோரை அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

The current image has no alternative text. The file name is: 1363154.jpg

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *