இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட மாம்பழங்களை அங்கே சந்தைப்படுத்த அமெரிக்கா மறுத்ததால் இந்திய மாம்பழ ஏற்றுமதியாளர்கள் கடுமையான இழப்பைச் சந்தித்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட ஏற்றுமதியாளர்களிடம் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்த மாம்பழங்களைத் திரும்பப் பெற வேண்டும் அல்லது அழிக்க வேண்டும் என்று அமெரிக்க அதிகாரிகள் கேட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
அழுகக்கூடிய பொருட்கள் என்பதாலும், இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப அதிக செலவாகும் என்பதாலும் இந்திய ஏற்றுமதியாளர்கள் அந்த மாம்பழங்களை அழிக்க முடிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து முழுமையாகத் தெரிந்துகொள்ள பிபிசி பல மாம்பழ ஏற்றுமதியாளர்களிடம் பேசியது. தங்கள் அடையாளத்தை வெளியிட விரும்பாத ஒரு ஏற்றுமதியாளர், அமெரிக்க அதிகாரிகளின் நடவடிக்கைகளால் மாம்பழ ஏற்றுமதியாளர்கள் கிட்டத்தட்ட ரூ. 4.2 கோடி மதிப்பிலான இழப்பைச் சந்தித்துள்ளதாகக் கூறியுள்ளார்.நிலைமை எப்படி இருப்பினும் இந்திய காய்கறி மற்றும் பழ ஏற்றுமதியாளர்கள் சங்கம் (WAFA), இந்தச் சம்பவத்திற்குப் பிறகும் மாம்பழங்களை ஏற்றுமதி செய்ய இருப்பதாகவும், கடந்த ஆண்டைக் காட்டிலும் கூடுதலாக அமெரிக்காவுக்கு மாம்பழங்களை ஏற்றுமதி செய்ய இருப்பதாகவும் அறிவித்துள்ளது.
