ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஜூன் 1ஆம் தேதியிலிருந்து 50 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பல்வேறு நாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிகபட்ச வரியை விதித்து அறிவிப்பு வெளியிட்டார். இதனை அடுத்து சிறிது காலத்திற்கு இந்த அறிவிப்பை நிறுத்தி வைப்பதாக அவர் கூறியிருந்தார்.
இதனை அடுத்து பல்வேறு நாடுகளும் அமெரிக்காவுடன் வர்த்தக பேச்சு வார்த்தையில் ஈடுபட்டன. அண்மையில் கூட பிரிட்டன் அமெரிக்காவுடன் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொண்டது.இந்தியாவும் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வது தொடர்பான பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. இந்த சூழலில் தான் அமெரிக்க அதிபர் டிரம்ப்
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிக்க வேண்டும் என தான் பரிந்துரை செய்திருப்பதாக கூறி இருக்கிறார். தன்னுடைய ட்ரூத் சோசியல் சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்திருக்கும் அவர் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் இந்த வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தை நடத்துவது என்பது மிகவும் கடினமானதாக இருக்கிறது என கூறியிருக்கிறார்.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் வாட் வரி, கார்ப்பரேட் அபராதம், அமெரிக்க நிறுவனங்களுக்கு எதிராக நியாயமற்ற வழக்குகள் என பல்வேறு தடைகளை கொண்டு இருக்கின்றன என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதன் காரணமாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மற்றும் அமெரிக்கா இடையிலான வர்த்தக பற்றாக்குறை என்பது 25 கோடி டாலர்களாக இருக்கிறது என தெரிவித்திருக்கிறார். இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள
முடியாத ஒன்று என்றும் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் வர்த்தக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தாலும் அதில் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை எனக் கூறும் டிரம்ப் ஜூன் 1ஆம் தேதியில் இருந்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50 சதவீத இறக்குமதி விதிக்கப்பட வேண்டும் என்பதை நான் பரிந்துரைக்கிறேன். இது ஜூன் 1 முதல்
அமலுக்கு வருகிறது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியிருக்கிறார் .ஏற்கனவே அமெரிக்கா ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார், ஸ்டீல் மற்றும் அலுமினியம் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதித்தது, மற்ற பொருட்களுக்கு 20% இறக்குமதி வரி விதித்திருந்தது. இதனை அடுத்து இதனை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக கூறியிருந்தது. இந்த சூழலில் தான் மீண்டும் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. இதனிடையே ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் கூட்டமைப்பு அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள தயாராக இருக்கிறோம் என தெரிவித்துள்ளது. ஆனால் எங்களை அச்சுறுத்தி பேச்சுவார்த்தை நடத்தி கூடாது என கூறியுள்ளது.