கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு ; இருவர் பலி கடந்த சில நாட்களாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா தொற்று பதிவாகியுள்ளது .
அந்த வகையில், கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கடந்த 2 நாட்களில் கேரள மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 182 ஆக உயர்ந்துள்ளது.
இதற்கிடையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு திருவனந்தபுரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த 59 வயது ஆண் மற்றும் திருவனந்தபுரத்தை சேர்ந்த 64 வயது ஆண் ஆகிய இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம், கொரோனா பரவல் குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என கேரள சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனாவால் உயிரிழந்த 2 நபர்களுக்கு ஏற்கனவே இதய நோய் உள்ளிட்ட உடல்நல பாதிப்புகள் இருந்ததாக கூறப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பாதிப்புகள் பதிவு செய்யப்படுவது கேரள சுகாதாரத்துறையின் தீவிர கண்காணிப்பு பணிகளை எடுத்துக் காட்டும் வகையில் அமைந்துள்ளது என்றும், கொரோனா பரவல் தீவிரமடையவில்லை என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
