யுத்தக்களத்தில் போரிட்ட போர் வீரர்களை சிப்பாய்கள் என்று கூறி, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவமதித்துள்ளதாக பிவிதுரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
கட்சித் தலைமை அலுவலகத்தில் நேற்று (20) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே இதனைக் குறிப்பிட்டார்.
மேலும் அவர், ‘‘விடுதலைப் புலிகளின் பிரிவினைவாதிகள் முகம் சுழித்துக்கொள்வார்கள் என்ற பயத்தில் ஜனாதிபதி தேசியப் போர்வீரர் நிகழ்வில் கலந்துகொள்ளாமல் இருக்கவே தீர்மானித்திருந்தார்.
இருந்தபோதும், தேசத்தை நேசிக்கும் மக்களால் ஏற்படுத்தப்பட்ட பெரும் அழுத்தத்தின் காரணமாக விருப்பமில்லாவிட்டாலும் தேசிய போர்வீரர் நிகழ்வில் கலந்துகொள்ள நேர்ந்தது.
ஆனால், போர்வீரர்களின் முன்னிலையில் பேசும்போதும் போர்வீரர்கள் என்ற சொல்லைப் பயன்படுத்தாமலிருக்க முயற்சித்தார்.
போர் வீரர்களை நினைவுகூருவதற்காகவே இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், ஜனாதிபதி போர் வீரர்களை சிப்பாய் என்றே அடையாளப்படுத்தினார். ஒவ்வொரு போர் வீரரும் சிப்பாயாக இருந்தாலும் சகல சிப்பாய்களும் போர்வீரர்களாக இருக்க மாட்டார்கள். சிப்பாய் ஒருவர் போர் வீரராக வேண்டுமென்றால் அவர் யுத்த பூமியில் போரிட்டிருக்க வேண்டும்.
ஆகவே, எமது போர் வீரர்களுக்கான தேசிய போர்வீரர் நிகழ்விலேயே அவர்களை சிப்பாய்கள் என்று கூறி போர் வீரர்களை ஜனாதிபதி அவமதித்து விட்டார் என்பதே எங்களின் நம்பிக்கையாகும்.
ஜனாதிபதி போர்வீரர்கள் மத்தியில் ஆற்றிய உரையை இன்றும் யுத்தத்துக்கான ஆரம்ப விதையாக அமைந்த இனவாத, பிரிவினைவாத, பயங்கரவாத வைராக்கியத்தைத் தூண்டிக்கொண்டிருக்கும் தற்போது ஜனாதிபதியின் நண்பர்களாகியுள்ள கனேடிய தமிழ்க் காங்கிரஸ் மற்றும் உலக தமிழர் பேரவை என்பவற்றின் தலைவர்கள் உள்ளிட்ட நண்பர்களின் மத்தியிலேயே ஆற்றியிருக்க வேண்டுமென்பதை நினைவுபடுத்திக்கொள்கிறோம்’’ என தெரிவித்துள்ளார்.
