சிரியாவுக்கான பொருளாதார தடைகளை நீக்கினார் டிரம்ப் சிரியாவில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருப்பதால் அந்நாட்டின் மீது, 20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகளை விலக்கிக் கொள்வதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.மேற்காசிய நாடான சிரியா கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசாத் குடும்பத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்தது. அப்போது அந்நாடு பயங்கரவாதத்தை ஆதரிப்பதாக கூறி அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்தது.
கடந்த, 1979ல் துவங்கிய இந்த பொருளாதார தடைகள், 2004 முதல் கடுமையாக்கப்பட்டன. அப்போது பஷார் அல் ஆசாத் சிரியாவின் அதிபராக பதவியேற்றிருந்தார்.பஷார் அல் ஆசாத்திற்கு எதிரான உள்நாட்டு போர் கடந்த ஆண்டு தீவிரமடைந்தது. கிளர்ச்சியாளர்களுக்கு அகமது அல் ஷாரா தலைமை தாங்கினார். இந்த கிளர்ச்சிப் படைகள் கடந்த டிசம்பரில் சிரியா முழுதையும் கைப்பற்றின. இதனால் பஷார் அல் ஆசாத் நாட்டை விட்டு தப்பி ரஷ்யா சென்று தஞ்சமடைந்தார்.
அதன் பின் புதிய இடைக்கால அதிபராக அகமது அல் ஷாரா பதவியேற்றார். இவர் மேற்காசிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்த அமெரிக்க அதிபர் டிரம்பை சவுதியில் நேற்று முன்தினம் சந்தித்தார்.
சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் இதற்கு ஏற்பாடு செய்தார். இந்த சந்திப்பு 33 நிமிடங்கள் நீடித்தது. அதன் பின் சிரியா மீதான பொருளாதார தடைகளை விலக்குவதாக டிரம்ப் அறிவித்தார்.
இது குறித்து அவர் கூறுகையில், ‘பயங்கரவாத நடவடிக்கைகள் காரணமாக சிரியா மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்தது. இப்போது சிரியா முன்னேற வேண்டும் என்பதால் அந்த தடைகளை நீக்க உத்தரவிடுகிறேன். தற்போது சிரியாவிற்கு முன்னேறும் நேரம் வந்துவிட்டது. சிரியா மீண்டும் அமைதியும், வளர்ச்சியும் அடைந்த நாடாக மாறும்’ என்றார்.
