ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் முக்கிய தீவிரவாதி பலி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த மாதம் 22-ந்திகதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா நேற்று (07) அதிரடி தாக்குதல் நடத்தியது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலுக்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் பாகிஸ்தானில் 4 இடங்கள் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 5 இடங்கள் என மொத்தம் 9 இடங்களில் பயங்கரவாதிகள் உள்ள அலுவலகங்கள், பயிற்சி முகாம்கள், அவர்களது வசிப்பிடங்கள் என 21 பயங்கரவாத நிலைகளை தரைமட்டமாக்கின.
இந்தியாவின் தாக்குதல் நடவடிக்கைக்கு பதிலடி கொடுப்போம் என்று பாகிஸ்தான் கூறியுள்ளது. இதனால், இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் செயல்பாட்டுத் தலைவரான அப்துல் ரவூப் அசார் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காந்தகார் விமானக் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட அப்துல் ரவூப் அசார் இந்திய படைகள் நேற்று நடத்திய தாக்குதலில் உயிரிழந்தது உறுதியாகியுள்ளது.
1999 ம் ஆண்டு டிசம்பர் 24 ம் திகதி நேபாளத்திலின் காத்மண்டுவிலிருந்து டெல்லிக்கு கிளம்பிய விமானத்தை பயங்கரவாதிகள் கடத்தினர்.
அந்த விமானத்தில் இருந்த பயணிகளை பணயக்கைதியாக வைத்து இந்திய சிறையிலுள்ள மசூத் அசார் உள்ளிட்ட மூன்று கைதிகளை விடுதலை செய்ய வேண்டுமென பயங்கரவாதிகள் நிபந்தனை விதித்தனர்.
அப்போது பிரதமராக இருந்த வாஜ்பாய், பயணிகளை கருத்தில் கொண்டு மசூத் அசார், உமர் ஷேக் மற்றும் முஷ்டாக் அகமது சர்கார் ஆகியோரை விடுவிக்க உத்தரவிட்டார்.
சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட மசூத் அசார், தனது சொந்த ஊரான பஹவல்பூர் சென்று ஜெய்ஷ்-இ-முகமது என்ற அமைப்பை தொடங்கி இந்தியாவுக்கு எதிரான செயல்களில் ஈடுப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
