சிந்து நதி பாகிஸ்தானுக்குள் நுழைவதைத் தடுப்பது இந்தியாவுக்கு சாத்தியமா இல்லையா

494112374_1000581335552901_6315815129110281410_n.jpg

சிந்து நதி மற்றும் அதன் இரு கிளை நதிகளும் பாகிஸ்தானுக்குள் நுழைவதைத் தடுப்பது இந்தியாவுக்கு சாத்தியமா இல்லையா என்ற கேள்வி பலராலும் கேட்கப்படுகிறது.

கடந்த செவ்வாயன்று ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற கொடூரமான தாக்குதலைத் தொடர்ந்து, சிந்து நதிப்படுகையில் உள்ள ஆறு நதிகளின் நீர்ப் பங்கீட்டை நிர்வகிக்கும் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்தது. அதன்பிறகு பலருக்கும் இந்த கேள்வி எழுந்துள்ளது.

கடந்த 1960ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் இடையே சிந்து நதிநீர் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

அணு ஆயுதத்தை வைத்திருக்கும் இந்த இரு அண்டை நாடுகளுக்கு இடையில் அதன்பிறகு இரண்டு போர்கள் நடந்தநிலையிலும் இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்படாமல் நிலைத்து நின்றது. எல்லை தாண்டிய நீர் மேலாண்மைக்கு சர்வதேச அளவில் ஓர் எடுத்துக்காட்டாக இந்த ஒப்பந்தம் பார்க்கப்பட்டது.எல்லை தாண்டிய தீவிரவாதத்தை பாகிஸ்தான் ஆதரிப்பதாகக் குற்றம் சாட்டும் இந்தியா, அதற்கு எதிராக எடுத்துள்ள பல நடவடிக்கைகளில் சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இடைநிறுத்துவதும் ஒன்று.

ஆனால், இந்தியாவின் குற்றச்சாட்டைத் திட்டவட்டமாக மறுக்கும் பாகிஸ்தான், இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு பதிலளிக்கும் விதமாக எதிர் நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது.

அத்துடன், நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்துவது “ஒரு போர்ச் செயலாகக் கருதப்படும்” என்றும் கூறியுள்ளது.சிந்து நதிநீர் ஒப்பந்தத்தின் கீழ், சிந்து நதிப் படுகையின் கிழக்குப் பகுதியின் சட்லெஜ், ராவி, பியாஸ் ஆகிய மூன்று நதிகள் இந்தியாவுக்கும், மேற்கு நதிகளான சிந்து, ஜீலம், செனாப் ஆகிய மூன்றின் 80% பாகிஸ்தானுக்கும் என ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த காலங்களிலும் ஒப்பந்தம் மீறப்படுவது தொடர்பான குற்றச்சாட்டுகளை பாகிஸ்தான் வைத்துள்ளது.

இந்தியாவின் சில நீர் மின்சாரத் திட்டங்களும், நீர் உள்கட்டமைப்புத் திட்டங்களும் நதியின் நீரோட்டத்தைக் குறைக்கும் என்றும், இதுபோன்ற திட்டங்கள் நதிநீர் ஒப்பந்தத்தை மீறும் செயல் என்றும் பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது.

பாகிஸ்தானின் விவசாயத்தில் 80 சதவிகிதத்திற்கு அதிகமான அதிகமானவையும், அந்நாட்டின் நீர்மின்சாரத்தில் மூன்றில் ஒரு பங்கும் சிந்து நதிப் படுகையைச் சார்ந்துள்ளது என்பது பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகளின் பின்னணியில் உள்ள கவலை.

இதற்கிடையே காலநிலை மாற்றம் போன்ற காரணிகளைக் கருத்தில் கொண்டு, பாசனம், குடிநீர் முதல் நீர் மின்சாரம் வரை மாறி வரும் தேவைகளைக் காரணம் காட்டி, ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்து மாற்றியமைக்க இந்தியா சமீப காலமாக அழுத்தம் கொடுத்து வருகிறது.

உலக வங்கியால் மத்தியஸ்தம் செய்யப்பட்ட சிந்து நதிநீர் ஒப்பந்தத்தைப் பின்பற்றுவது தொடர்பான குற்றச்சாட்டுகளை பரஸ்பரம் சுமத்தி வந்திருந்தாலும், இந்த ஒப்பந்தத்தை நிறுத்துவதாக அறிவிப்பது இதுவே முதல் முறை.

குறிப்பாக நதியின் மேல்நிலையை கொண்டிருப்பதால் நிலவியல் ரீதியாகச் சாதகமான இடத்தில் இருக்கும் இந்தியா இந்த இடைநிறுத்தத்தை அறிவித்திருக்கிறது.இரு நாடுகளுக்கு இடையிலான நதிநீர் உடன்படிக்கை நிறுத்தப்படுவதன் உண்மையான அர்த்தம் என்ன? பாகிஸ்தானின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் சிந்து நதியின் நீரை இந்தியா தடுத்து நிறுத்துவதோ அல்லது திருப்பிவிடுவதோ சாத்தியமா? உண்மையில் இந்தியாவில் அப்படிச் செய்துவிட முடியுமா? இவை சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த நுணுக்கமான கேள்விகள்.

நதியில் நீர்வரத்து அதிகமாக இருக்கும் காலத்தில், மேற்கு ஆறுகளில் பாயும் பல்லாயிரக்கணக்கான பில்லியன் கன மீட்டர் அளவிலான தண்ணீரைத் தடுத்து நிறுத்துவது என்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஏனென்றால், இவ்வளவு அதிக அளவிலான நீரைச் சேமித்து வைக்கத் தேவையான மிகப்பெரிய சேமிப்பு உள்கட்டமைப்போ, நீரின் போக்கை திருப்பிவிடத் தேவையான விரிவான கால்வாய்களோ இந்தியாவிடம் இல்லை என நிபுணர்கள் கூறுகின்றனர்.

“இந்தியாவின் உள்கட்டமைப்பு பெரும்பாலும் ஆற்றின் வழியாக இயங்கும் நீர்மின் நிலையங்களாகும். அவற்றுக்குப் பெரிய அளவிலான நீர் சேமிப்புத் தேவை இல்லை” என்று அணைகள், ஆறுகள் மற்றும் மக்கள் தொடர்பான தெற்காசிய வலையமைப்பின் (South Asia Network on Dams, Rivers and People) பிராந்திய நீர்வள நிபுணர் ஹிமான்ஷு தாக்கர் கூறினார்.

இத்தகைய நீர்மின் நிலையங்கள், அதிக அளவு தண்ணீரைத் தடுத்து நிறுத்தாமல், ஓடும் நீரின் சக்தியை மின்சாரம் தயாரிக்க பயன்படுத்துகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

போதுமான உள்கட்டமைப்பு இல்லாததால், சிந்து நதிநீர் ஒப்பந்தத்தின் கீழ் ஜீலம், செனாப் மற்றும் சிந்து நதிகளில் 20% பங்கைக்கூட இந்தியாவால் முழுமையாகப் பயன்படுத்த முடியவில்லை. நீர் சேமிப்புக் கட்டமைப்புகளை உருவாக்க இந்தியா விரும்பினாலும், சிந்து நதிநீர் ஒப்பந்தத்தின் விதிமுறைகளை மேற்கோள் காட்டி பாகிஸ்தான் எதிர்க்கிறது.

தற்போது, உள்கட்டமைப்புக்குத் தடையாக இருந்த நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தியிருக்கும் இந்தியா, பாகிஸ்தானுக்கு தெரிவிக்காமல் தற்போதுள்ள உள்கட்டமைப்பை மாற்றியமைக்கலாம் அல்லது புதிய கட்டமைப்புகளை நிர்மாணித்து அதன் மூலம் அதிக நீரைத் தடுத்து நிறுத்தலாம் அல்லது திருப்பிவிடலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

“அதுமட்டுமல்ல, கடந்த காலங்களைப் போலன்றி, இந்தியா இப்போது தனது கட்டமைப்புத் திட்ட ஆவணங்களை பாகிஸ்தானுக்குடன் பகிர்ந்துகொள்ள வேண்டியது கட்டாயமில்லை” என்று ஹிமான்ஷு தாக்கர் கூறுகிறார்.

The current image has no alternative text. The file name is: 494112374_1000581335552901_6315815129110281410_n.jpg

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *