பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு ஆப்கனிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய எமிரேட்டின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அப்துல் காஹர் பால்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை ஆப்கனிஸ்தானின் வெளியுறவு அமைச்சகம் கண்டிக்கிறது. இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அனுதாபத்தைத் தெரிவிக்கிறது. இத்தகைய செயல்கள் பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாக உள்ளன” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பயங்கரவாதத்திற்கு இந்தியா அடிபணியாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் உடல்களில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய பிறகு அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கனத்த இதயத்துடன், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் இறந்தவர்களுக்கு இறுதி மரியாதை செலுத்தினேன். பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு இந்தியா அடிபணியாது. இந்தக் கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலின் குற்றவாளிகள் தப்பிக்க மாட்டார்கள்.” என்று தெரிவித்துள்ளார்.
