தலைமறைவாகியுள்ள தேசபந்து தென்னகோனை 11 நாட்கள் கடந்தும் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை… தேடப்படும் செவ்வந்தி , பிரசன்ன ரணவீர தொடர்பிலும் இதுவரை தகவல் இல்லை.முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்து 11 நாட்கள் கடந்துவிட்ட போதிலும், இதுவரை அவர் தொடர்பான எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வெலிகம – பெலன பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட 8 பேரை கைது செய்யுமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் கடந்த மாதம் 27 ஆம் திகதி உத்தரவிட்டது.
முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவிக்குமாறு காவல்துறை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவ்வாறானதொரு பின்னணியில், முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் நீதிமன்றத்தை தவிர்த்து தலைமறைவாகியிருந்தால் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் அவரது அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் அனைத்தும் தடை செய்ய முடியும் என பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்..
இதேவேளை
பாதாள உலகக் கும்பல் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டதற்கு மூளையாக செயல்பட்டதாக கருதப்படும் இஷார செவ்வந்தியுடன் ஏராளமான பாதாள உலகக் கும்பல் தலைவர்கள் தொடர்பு இருப்பதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.கணேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பாக 11 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தாலும், மூளையாக செயற்பட்ட 25 வயது இஷார செவ்வந்தி இன்னும் கைது செய்யப்படவில்லை. சென்ற மாதம் 19 ஆம் திகதி கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்ட தினம் முதல் இன்று வரை சுமார் 19 நாட்களாக அவர் தேடப்பட்டு வருகிறார்.
பல பொலிஸ் குழுக்கள் அவரை தேடும் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளன. இத்தகைய சூழலில் அவர் கடல் வழியாக படகில் தப்பிச் சென்றதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் சிறப்பு விசாரணையை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை மூன்று நாட்களுக்கு முன்னர் முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீரவை (Prasanna Ranaweera) கைது செய்வதற்காக களனி பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்ற போது அவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில் மூன்றாவது நாளாகவும் அவரை தேடும் விசாரணைகள் தொடர்கின்றன.
2010 ஆம் ஆண்டு போலி ஆவணங்களை தயாரித்து கிரிபத்கொடை (Kiribathgoda) பிரதேசத்தில் உள்ள அரச காணி ஒன்றை விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் பிரசன்ன ரணவீர கைது செய்யப்படவிருந்த நிலையிலேயே இவ்வாறு தப்பிச் சென்றார்.
போலி ஆவணங்களை தயாரித்து கிரிபத்கொடை பிரதேசத்தில் உள்ள அரச காணியை விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா (Mervyn Silva) உட்பட மூவர் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
