25 வயது சந்தேக நபரான இஷாரா செவ்வந்தியைத் தேடுவதற்காக நாடு முழுவதும் விசேட தேடுதல்

download-5-34.jpeg

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் பின்னணியில் உள்ளதாகக் கருதப்படும் 25 வயது சந்தேக நபரான இஷாரா செவ்வந்தியைத் தேடுவதற்காக நாடு முழுவதும் விசேட தேடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.

குறித்த பெண் இந்த நாட்டில் தங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலின்படி இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கொலைக்குப் பிறகு குறித்த சந்தேகநபர் தலைமறைவாகியுள்ளதோடு மேலும் சில தகவல்கள் குறித்த சந்தேக நபர் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இருப்பினும், அந்தப் பெண் இந்த நாட்டில் தங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், தெஹிவளை மற்றும் மதுகமவில் பல இடங்களில் நேற்று விசேட தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இருப்பினும், அவர் குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்று பொலிசார் தெரிவித்தனர்.

இவ்வாறான சூழ்நிலையில், கொலை மிரட்டல்கள் வந்ததாகக் கூறி, அந்தப் பெண்ணின் பாட்டி, தாய் மற்றும் சகோதரர் ஆகியோர் நீர்கொழும்பு வீதி, ஜெயா மாவத்தையில் உள்ள தங்கள் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

இதற்கிடையில், கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மேலும் மூன்று சந்தேக நபர்கள் 48 மணி நேர தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் விசாரணைக்காக பொலிஸ் காவலில் வைக்கப்படுவார்கள் என்று கொழும்பு குற்றப்பிரிவு நேற்று நீதிமன்றத்திற்கு அறிவித்தது.

கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெக்குனாவல முன்னிலையில் மூன்று சந்தேக நபர்களும் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை வைத்திருந்ததாகவும், கொலைக்கு முந்தைய நாள் துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு அதை வழங்கியதாகவும், துப்பாக்கிச் சூடு நடத்தியவரையும் சந்தேக நபரான இஷாரா செவ்வந்தியையும் முச்சக்கர வண்டியில் ஏற்றிச் சென்றதாகவும் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சந்தேக நபர்களில் அஸ்கிரியவில் உள்ள வல்பொல பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 19 மற்றும் 25 வயதுடைய இரண்டு சகோதரர்களும் அடங்குவர். அவர்கள் நீர்கொழும்பு பகுதியில் உள்ள ஒரு தொலைத்தொடர்பு நிறுவனத்தில் பணிபுரிவதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையில், கைது செய்யப்பட்ட துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் காதலி நீண்ட விசாரணைக்குப் பிறகு நேற்றைய தினம் விடுவிக்கப்பட்டார்.மேலும் அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதுடன் தேவைப்பட்டால் அவர் மீண்டும் அழைக்கப்படுவார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், சஞ்சீவவின் கொலையாளியான கமாண்டோ சமிந்து தப்பிச் சென்ற வேனை வைத்திருந்ததற்காக அதுருகிரிய காவல்துறையைச் சேர்ந்த 37 வயது கான்ஸ்டபிள் ஹசித ரொஷான் கைது செய்யப்பட்டார்.

இந்தக் கொலை தொடர்பாக எட்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், அவர்களில் இருவர் பொலிஸ் கான்ஸ்டபிள்கள். இரண்டு முன்னாள் கமாண்டோக்கள் இருப்பதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *