வீடுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் சமந்த வித்யாரத்ன

download-2-17.jpeg

உடனடியாக வீடுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் சமந்த வித்யாரத்ன அண்மையில் ஏற்பட்ட அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டு முகாம்களில் வாழும் குடும்பங்களுக்கு உடனடியாக வீடுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.

மார்ச் முதல் வாரத்தில் இதற்கான கட்டுமான பணிகள் தொடங்கும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சின் செயலாளர்கள் மற்றும் முப்படை அதிகாரிகளுடன் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சில் இன்று (10) நடைபெற்ற கலந்துரையாடலின் போது அமைச்சர் இதனை சுட்டிக்காட்டினார்.

அதன்படி, கேகாலை மாவட்டத்தில் நிலச்சரிவுகள் காரணமாக இருபத்தி இரண்டு குடும்பங்கள் முகாம்களில் இருப்பதாகவும், பதுளை மாவட்டத்தின் ஹல்துமுல்லைப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவுகள் காரணமாக, ஐம்பத்தொரு குடும்பங்கள் தங்கள் குழந்தைகளுடன் கபரகலையில் மூடப்பட்ட தேயிலை தொழிற்சாலையில் ஐந்து ஆண்டுகளாக வசித்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்த மக்களுக்கான நிரந்தர வீடுகளுக்கான கட்டுமானப் பணிகள் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் செலவில் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.

இந்த வீடுகளின் கட்டுமானப் பணிகளை முப்படையினர் பொறுப்பேற்றுள்ளதாகவும், அதன்படி, ஹல்துமுல்ல கபரகல வீடுகளின் கட்டுமானப் பணிகள் இராணுவத்தினராலும், கேகாலை வீடுகளின் கட்டுமானப் பணிகள் கடற்படையினராலும் பொறுப்பேற்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், இந்த வீடுகளின் கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்துவதற்காக, கபரகல இடம்பெயர்ந்தோர் முகாம் 15 ஆம் திகதி ஆய்வு செய்யப்படும் என்றும், கேகாலையில் இடம்பெயர்ந்தோர் முகாம் எதிர்வரும் 17 ஆம் திகதி ஆய்வு செய்யப்படும் என்றும் கூறியுள்ளார்.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *