காசா போர் நிறுத்தம் தொடர்பில் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைகள் விரைவில் ஆரம்பிக்க எதிர்பார்க்கப்படும் நிலையில் நான்காவது சுற்று கைதிகள் பரமாற்றத்தின் கீழ் கடந்த சனிக்கிழமை (01) 183 பலஸ்தீன கைதிகளுக்கு பகரமாக மூன்று இஸ்ரேலிய பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.
காசாவில் போர் நிறுத்தம் அமுலில் இருக்கும் நிலையில் ஆக்கிமிக்கப்பட்ட மேற்குக் கரையின் ஜெனின் நகரில் இஸ்ரேலின் படை நடவடிக்கை தொடர்வதோடு புதிய தாக்குதல்களில் மேலும் ஐந்து பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கடந்த மாதம் எட்டப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையின் ஓர் அங்கமாக 34, 53 மற்றும் 65 வயது மூன்று பணயக்கைதிகள் செஞ்சிலுவை சங்கத்திடம் ஹமாஸ் அமைப்பினால் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து விடுவிக்கப்பட்ட பலஸ்தீன கைதிகள் பஸ் வண்டிகளில் காசா மற்றும் மேற்குக் கரைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
விடுவிக்கப்பட்ட பலஸ்தீன கைதிகள் பலரும் இஸ்ரேல் சிறையில் சித்திரவதை மற்றும் பட்டினியில் இருந்ததற்கான அடையாளங்கள் இருப்பதாக பலஸ்தீன கைதிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
காசாவில் போர் நிறுத்தத்திற்கு மத்தியில் இடம்பெயர்ந்த மக்கள் தமது வீடுகளுக்கு திரும்பி வருவதோடு இடிபாடுகளில் சிக்கி இருக்கும் உடல்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.
கடந்த 24 மணி நேரத்தில் 27 சடலங்கள் மருத்துவமனைகளுக்கு கிடைத்திருப்பதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதில் புதிய தாக்குதலில் கொல்லப்பட்ட ஒருவர் மற்றும் முந்தைய தாக்குதல்களில் காயமடைந்த நிலையில் உயிரிழந்த இருவர் தவிர்த்து 24 உடல்கள் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டவை என்று அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.
