நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த முத்துக்காளிப்பட்டி ராம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கோமதி (45). இவர், கூட்டுறவு சங்க ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் கடந்த 20-ம் தேதி, “என் வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 18 சவரன் தங்க நகையை திருடிச்சென்று போய்விட்டனர்” என ராசிபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். புகாரை பெற்ற ராசிபுரம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.அப்போது திருட்டு நடைபெற்ற வீட்டின் அருகே இருசக்கர வாகனத்தில் 3 நபர்கள் செல்வதை அறிந்த காவல் துறையினர் பல்வேறு பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு ராசிபுரம் துணை காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர், போலீசாரை கண்டதும் அதிவேகமாகச் சென்றதாக கூறப்படுகிறது. இதில், நிலை தடுமாறி கீழே விழுந்த இருவருக்கு கை, கால் முறிவு ஏற்பட்டு தற்போது ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களிடம் போலீஸார் மேற்கொண்டு விசாரணையில், அவர்கள் சென்னையைச் சேர்ந்த டேவிட் (எ) சுந்தர்ராஜ் (24), மணி (22). வேலூரைச் சேர்ந்த மணிகண்டன் (47) ஆகியோர் என்பது தெரியவந்தது. இவர்கள்தான் மேற்சொன்ன திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.விசாரணையில் 20.01.25 முதல் 23.01.25 வரை சேலம், ராசிபுரம், நாமக்கல், புதுக்கோட்டை, மதுரை, தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 25க்கும் மேற்பட்ட வீடுகளில் இவர்கள் நகை, பணம் மற்றும் இரு சக்கர வாகனங்களை திருடி சென்றது தெரியவந்தது. இதில் கைது செய்யப்பட்ட நபர்கள் மீது பல்வேறு காவல் நிலையங்களில் 40க்கு மேற்பட்ட வழக்குகள் நிலவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
