பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம் அனுமதி பெற வேண்டும்

download-14-13.jpeg

திண்டுக்கல் மாவட்டம் பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குபவர்கள் உணவு பாதுகாப்புத் துறையிடம் அனுமதி பெற வேண்டும் அனுமதி இல்லாமல் உணவு வழங்கினால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என திண்டுக்கல் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.அறுபடை வீடுகளில்

மூன்றாம் படை வீடான திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அமைந்துள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகை தருவர்.இவ்வாறு வருகை தரும் பக்தர்கள் படிப்பாதை, யானை பாதை, மின் இழுவை ரயில், ரோப் கார் சேவை வழியாக மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம். தைப்பூசத்தை முன்னிட்டு பழனிக்கு பாதயாத்திரை பக்தர்கள் வருகை தொடங்கியுள்ளது. இதனையடுத்து, மதுரை, சிவகாசி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்கள் கம்பம், வத்தலகுண்டு, நத்தம் உள்ளிட்ட

பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் செம்பட்டி வழியாக பாதயாத்திரையாக சென்று கொண்டு உள்ளனர். இதேபோல், நத்தம் வழியாக, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டையைச் சேர்ந்த பக்தர்கள் பழனிக்கு பாதயாத்திரையாக வருகின்றனர். மேலும், திண்டுக்கல், பொள்ளாச்சி, செம்பட்டி வழியாக பழனிக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்காக தர்மத்துப்பட்டி, கன்னிவாடி, ரெட்டியார்சத்திரம், ஒட்டன்சத்திரம், சத்திரப்பட்டி, ஆயக்குடி, கணவாய்பட்டி, கூம்பூர், ஊதியூர், குமரலிங்கம் உள்பட 14 இடங்களில் மின்சாரம், கழிப்பிடம், குளியலறை உள்ளிட்ட வசதிகளுடன் தங்கும்கூடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அங்கு பக்தர்கள் கட்டணம் இல்லாமல் தங்கி கொள்ளலாம் மேலும் நள்ளிரவு 11 மணி முதல் அதிகாலை 3 மணி வரை

பாதயாத்திரையாக வருவதை பக்தர்கள் தவிர்க்க வேண்டும். இரவில் பாதயாத்திரை மேற்கொள்ளும் போது ஒளிரும் பட்டை அணிந்து குழுவாக செல்ல வேண்டும் என கோவில் நிர்வாகம் கூறியுள்ளது. மேலும், திண்டுக்கல் முதல் பழனி வரை 24 மணி நேரமும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு அனுமதி இல்லாமல் உணவு வழங்கினால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என திண்டுக்கல் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில்,” ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பிப்ரவரி 11ஆம் தேதி தைப்பூசத் திருவிழா நடக்கவுள்ளது. இதற்காக

பல்வேறு மாவட்டங்களில் இருந்து பாதயாத்திரை பக்தர்கள் பழனி முருகன் கோயிலுக்கு சென்று வருகின்றனர். அவ்வாறு செல்லும், சிவகங்கை, காரைக்குடி, செம்பட்டி, நத்தம், வேடசந்தூர், ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பல்வேறு வழித்தடங்களில் நடந்து வரும் பக்தர்களுக்காக ஏராளமானோர் உணவு சமைத்து அன்னதானம் வழங்குகின்றனர். இதுபோன்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குபவர்களுக்கு உணவு பாதுகாப்புத்துறை கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.பாதயாத்திரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குபவர்கள் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் அனுமதி

பெற வேண்டும். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்ட பின்பு சம்பந்தப்பட்ட இடத்தை முழுமையாக சுத்தம் செய்ய வேண்டும். பக்தர்களுக்கு கண்டிப்பாக அரை லிட்டர் தண்ணீர் பாட்டில் வழங்கக் கூடாது. அன்னதானம் வழங்க பிளாஸ்டிக் பைகள் உபயோகப்படுத்தக் கூடாது. இதனை மீறுபவர்கள் மீது ரூ.1000 அபராதம் விதிக்கப்படும். மேலும், இதனை கண்காணிக்க சுழற்சி முறையில் உணவுத்துறை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்” என கூறப்பட்டுள்ளது.

Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *