12ஆம் திகதி இரவு சமையலறையிலிருந்து எடுக்கப்பட்ட உணவுப் பொட்டலத்தில் கரப்பான் பூச்சி
இலங்கை துறைமுக அதிகார சபையின் கட்டுப்பாட்டில் உள்ள கொழும்பு துறைமுகத்தின் சமையல் அறையில் உள்ள மீன் கறியில் கரப்பான் பூச்சி இருந்ததாக அந்த துறைமுக ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கடந்த 12ஆம் திகதி இரவு சமையலறையிலிருந்து எடுக்கப்பட்ட உணவுப் பொட்டலத்தில் கரப்பான் பூச்சி இருந்ததாகவும் கிழக்கு கொள்கலன் முனையத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு துறைமுக சமையலறையில் உணவு மற்றும் அதன் நிர்வாகம் மற்றும் தரம் ஆகியவற்றில் பாரிய பிரச்சினை காணப்படுவதாகவும், சில நாட்களுக்கு முன்னர் உடைந்த கத்தியின் ஒரு துண்டு உணவில் காணப்பட்டதாகவும் ஊழியர்கள் குறிப்பிடுகின்றனர்.
சில தொழிற்சங்கங்களின் செல்வாக்கால் அதிகாரிகள், ஊழியர்கள் சமீபகாலமாக மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளதாகவும், அதிருப்தியால் உணவு பாதுகாப்பு குறைந்துள்ளதாகவும் ஊழியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
துறைமுக அதிகாரசபைக்கு அண்மையில் நியமிக்கப்பட்ட பலருக்கு அதன் நிர்வாகம் தொடர்பில் சரியான புரிதல் இல்லை என தெரிவித்த ஊழியர்கள், தற்போதைய நிர்வாகத்தின் உயர் அதிகாரி ஒருவர் துறைமுக சமையலறையில் இருந்து மேலதிகமாக உணவுகளை எடுத்துச் சென்று பணம் செலுத்தச் சென்றுள்ளதாகவும் தெரிவித்தனர்.
