40 கோடி பேர் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா; பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்!
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக் ராஜில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா இன்று தொடங்குகிறது. இதற்காக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மகா கும்பமேளா.
உலகிலேயே மக்கள் ஓரிடத்தில் கூடும் நிகழ்வுகளில் முதன்மையானது. இதில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படும் பக்தர்கள் எண்ணிக்கை ஆயிரங்கள் அல்ல லட்சங்கள் அல்ல கோடிகளை தொடுகிறது. விழா நடைபெற உள்ள ஒன்றரை மாதங்களில் பிரயாக் ராஜில் 40 கோடி பேர் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வளவு பெரிய கூட்டத்தை சமாளிப்பது எந்த ஒரு அரசுக்கும் இமாலய சவாலான பணி. அசம்பாவிதங்கள் எதுவுமின்றி விழாவை நடத்துவதற்கான ஏற்பாடுகள் கடந்த ஓராண்டாகவே திட்டமிடப்பட்டு தற்போது நிறைவுக்கட்டத்தை எட்டியுள்ளது. மக்களை வழிநடத்திச்செல்லும் பணி முழுமையும் ஏஐ தொழில்நுட்ப உதவியுடன் செயல்படுத்தப்படுகிறது.
விழாவிற்கு வரும் ஒவ்வொருவரையும் எண்ணி கூட்டம் ஓரிடத்தில் அதிகளவு குவிந்தால் உடனடியாக ஏஐ கேமராக்கள் காவல்துறையினரை உஷார்படுத்தும். இதற்காக 328 ஏஐ கேமராக்கள் நகரெங்கும் பொருத்தப்பட்டுள்ளன. இது தவிர வழக்கமான கண்காணிப்புக்கென 2 ஆயிரத்து 751 சாதாரண கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.
40 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ள நிலையில் அவர்களை ஒருங்கிணைக்க பிரத்யேகமான மொபைல் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இவர்கள் தவிர தேசிய பேரிடர் மீட்பு படையினர், மாநில பேரிடர் மீட்பு படையினரும் களமிறக்கப்பட உள்ளனர்.
வானத்திற்கு மேலும் நீருக்கு கீழும் ட்ரோன்களை இயக்கி கண்காணிப்பு பணிகள் நடைபெற உள்ளது. பல மொழி பேசுபவர்கள் வருவார்கள் என்பதால் அவர்களை மொபைல் செயலி உதவியுடன் தகவல் பரிமாறிக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கழிவறை அருகே எங்கு இருக்கிறது என்பதை 10 மொழிகளில் அறிய சாட்பாட்டுகளும் உருவாக்கப்பட்டுள்ளன.
நாசவேலைகள் எதுவும் நடந்துவிடக்கூடாது என்பதற்காக 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கும்பமேளா ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பதற்காகவே 66 ஊர்களை உள்ளடக்கி மகாகும்ப் நகர் என்ற பெயரில் ஒரு மாவட்டமே ஏற்படுத்தப்பட்டுள்ளது. சன்னியாசிகள் ஒருபுறம் சாட்பாட்டுகள் ஒருபுறம் என மகாகும்பமேளா பழமையும் புதுமையும் கலந்த விந்தை திருவிழாவாக நடந்தேற உள்ளது.
