3 பேர் பனைமரத்தின் மீது மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொள்ளாச்சி அடுத்த கிணத்துக்கடவு அருகே உள்ள சிங்கையன்புதூரைச் சேர்ந்த வீரமணி 32 பிரபு 29 கருப்பசாமி 25 ஆகியோர் சிங்கையன்புதூரில் இருந்து கிணத்துக்கடவு பகுதியில் உள்ள பேக்கரியில் டீ சாப்பிட்டு விட்டு இருசக்கர வாகனத்தில் மீண்டும் தங்களது ஊருக்குத் திரும்பியுள்ளனர். அப்போது கிணத்துக்கடவு சொக்கனூர் ரோட்டில் சென்றபோது திடீரென இருசக்கர வாகனம் ரோட்டோரம் இருந்த பனை மரத்தின் மீது பலமாக மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற 3 பேரும் பலத்த காயமடைந்தனர். தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற கிணத்துக்கடவு போலீசார் காயமடைந்த மூன்று பேரையும் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 3 பேரின் உடலையும் பரிசோதனை செய்த மருத்துவர்கள், 3 பேரும் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் சம்பவ இடத்தை கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். 3 பேர் பனைமரத்தின் மீது மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
