30 அடி பள்ளத்தில் வளைவில் திரும்பும் போது அரசு பஸ் விபத்தில் சிக்கியது
கேரளா மாநிலம் இடுக்கியில், 30 அடி பள்ளத்தில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் பலத்த காயமுற்றனர்.
கேரளா மாநிலம் இடுக்கியில் புல்லுப்பாறை அருகே 30 அடி பள்ளத்தில் வளைவில் திரும்பும் போது அரசு பஸ் விபத்தில் சிக்கியது. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் நீண்ட நேரம் போராடி காயம் அடைந்தவர்களை மீட்டனர். உயிரிழந்த 3 பேரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனை செய்ய அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் 30க்கும் மேற்பட்டோர் பலத்த காயமுற்றனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் சிலரது, நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
அரசு பஸ்சினை வாடகைக்கு எடுத்து, மாவேலிக்கரையில் இருந்து தஞ்சாவூருக்கு சுற்றுலா சென்றுவிட்டு, சுற்றுலா பயணிகள் வீடு திரும்பி கொண்டிருந்த போது விபத்து நிகழ்ந்துள்ளது என்பது விசாரணையில் தெரியவந்தது.
பஸ் வளைவில் திரும்பும் போது கட்டுப்பாட்டை இழந்து, விபத்து ஏற்பட்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்துக்கு குறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
