அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்க உள்ள நிலையில், இந்த உத்தரவு வந்துள்ளது.
தன்னைப் பற்றிய தகவல்களை வெளியில் சொல்லாமல் ரகசியமாக வைத்திருப்பதற்காக பணம் கொடுத்த விவகாரத்தில் (hush money), டொனால்ட் டிரம்புக்கு நியூயார்க்கில் வரும் ஜனவரி 10-ஆம் தேதி அன்று தண்டனை அறிவிக்கப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார். இன்னும் இரண்டு வாரங்களில் அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்க உள்ள நிலையில், இந்த உத்தரவு வந்துள்ளது.
“டிரம்புக்கு சிறைத்தண்டனை, அபராதம் போன்ற எதுவும் விதிக்கப்படாது, மாறாக இதற்கு ‘சரியான தீர்வு கண்டு வழங்கப்படும்’. அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அவர் இந்த விசாரணைக்கு நேரிலோ அல்லது காணொளி வாயிலாகவோ கலந்து கொள்ளலாம்”, என்று நியூயார்க் நீதிமன்றத்தின் நீதிபதி ஜுவான் மெர்ச்சன் உத்தரவிட்டார்.
அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதைப் பயன்படுத்தி, டிரம்ப் தனக்கு எதிரான இந்த வழக்கை தள்ளுபடி செய்ய முயன்றார்.
தண்டனை விதிக்கப்போவதாக உள்ள நீதிபதியின் முடிவை டிரம்புக்கு ஆதரவான குழு விமர்சித்தது. மேலும் ‘சட்டத்தின் வழி செயல்படுத்தப்படாத இந்த வழக்கை உடனடியாக தள்ளுபடி’ செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளது.
